06.055 திருக்கயிலாயம் | போற்றி திருத்தாண்டகம் | வேற்றாகி விண்ணாகி நின்றாய் | திருநாவுக்கரசர் தேவாரம்
Автор: Panniru Thirumurai
Загружено: 2024-09-21
Просмотров: 6992
Описание:
06.055 திருக்கயிலாயம் | போற்றி திருத்தாண்டகம் | வேற்றாகி விண்ணாகி நின்றாய் | திருநாவுக்கரசர் தேவாரம் | @PanniruThirumurai
சிவபெருமான் அம்பிகையோடு உடனாகி எழுந்தருளியுள்ள மலை திருக்கயிலாயம். அழித்தல் தொழிலையுடைய உருத்திர மூர்த்தி வீற்றிருந்தருளும் தலமாதலால் நொடித்தான்மலை (நொடித்தல் - அழித்தல்) எனவும் வழங்கப்படுகிறது. இத்தலம் சுந்தரரால் நொடித்தான்மலை என்ற பெயராலேயே பாடப்பெற்றது. இம்மலையை உமாதேவி அஞ்சுமாறு இராவணன் பெயர்க்க முயன்ற போது, இறைவன் தன் கால் விரலால் அழுத்த, மலையின் கீழ் அகப்பட்டுத் தன் பிழையை உணர்ந்து வழிபட்டு வரங்களும், மந்திர வாளும் பெற்ற பதி.
திருமுறை : ஆறாம் திருமுறை 055 வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்
பதிக குரலிசை : திரு சங்கர கிருஷ்ணமூர்த்தி
இது பூ கயிலாயம் எனவும் பெயர் பெறும். இயற்கையான கோயிலமைப்பில் பனி மூடியே சிவலிங்கமாகக் காட்சியளிக்கும், இத்திருமலையை எப்பக்கமிருந்து யாரொருவர் எவ்வண்ணமாக நோக்கினும் அவ்வவர்க்கு அவ்வண்ணமாகவே அக்கோயிலாகவே காட்சி தருகிறது; என்பது இம்மலையின்கண் அமைந்துள்ள அதிசயமாகும். இம்மலையின் சிகரம் தென்திசை நோக்கியதாக உள்ளது.
அப்பர் பெருமான், கயிலாயத்தையும், அங்கு ஆளுநாயகன் வீற்றிருக்கும் அற்புதக் கோலத்தையும் காணுமது காதலித்து நெடிய யாத்திரையை மேற்கொண்டு; இந்த யாத்திரையின் பயனாக அவர் திருவையாற்றில் கயிலைத் தரிசனம் காணப் பெற்றார். அப்பர் பெருமானின் திருக்கயிலைத் திருத்தாண்டகங்கள் "போற்றித் திருத்தாண்டகங்கள்" என்று போற்றப்படுகின்றன.
இறைவனருளால் திருஅஞ்சைக்களத்திலிருந்து வெள்ளையானை மீதேறி சுந்தரர் கயிலைக்குச் சென்றபோது, திருவருட் கருணையை நினைந்து, "தானெனை முன்படைத்தான்" என்று பதிகம் பாடியவாறே போற்றிச் சென்றார். இப்பதிகம் வருணனால் இவ்வுலகில் திருஅஞ்சைக்களத்தில் சேர்ப்பிக்கப் பெற்று உலகிற்குக் கிடைத்தது.
00:29 வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி
ஓவாத சத்தத்து ஒலியே போற்றி
ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி
ஆறங்கம் நால்வேதம் ஆனாய் போற்றி
காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி. ..... (01)
02:06 பிச்சாடல் பேயோடு உகந்தாய் போற்றி
பிறவி அறுக்கும் பிரானே போற்றி
வைச்சாடல் நன்று மகிழ்ந்தாய் போற்றி
மருவி என் சிந்தை புகுந்தாய் போற்றி
பொய்ச்சார் புரம் மூன்றும் எய்தாய் போற்றி
போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி
கச்சாக நாகம் அசைத்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி. ..... (02)
03:42 மருவார் புரம் மூன்றும் எய்தாய் போற்றி
மருவி என் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி. ..... (03)
05:18 வானத்தார் போற்றும் மருந்தே போற்றி
வந்து எந்தன் சிந்தை புகுந்தாய் போற்றி
ஊனத்தை நீக்கும் உடலே போற்றி
ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
தேனத்தை வார்த்த தெளிவே போற்றி
தேவர்க்கும் தேவனாய் நின்றாய் போற்றி
கானத்தீ ஆடல் உகந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி. ..... (04)
06:53 ஊராகி நின்ற உலகே போற்றி
ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
பேராகி எங்கும் பரந்தாய் போற்றி
பெயராது என் சிந்தை புகுந்தாய் போற்றி
நீராவியான நிழலே போற்றி
நேர்வார் ஒருவரையும் இல்லாய் போற்றி
காராகி நின்ற முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி. ..... (05)
08:29 சில்லுருவாய்ச் சென்று திரண்டாய் போற்றி
தேவர் அறியாத தேவே போற்றி
புல்லுயிர்க்கும் பூட்சி புணர்ந்தாய் போற்றி
போகாது என் சிந்தை புகுந்தாய் போற்றி
பல்லுயிராய்ப் பார்தோறும் நின்றாய் போற்றி
பற்றி உலகை விடாதாய் போற்றி
கல்லுயிராய் நின்ற கனலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி. ..... (06)
10:04 பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி
பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி
எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய் போற்றி
என் சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனும் தீ ஆனாய் போற்றி
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி. ..... (07)
11:40 இமையாது உயிராய் இருந்தாய் போற்றி
என் சிந்தை நீங்கா இறைவா போற்றி
உமை பாகம் ஆகத்து அணைத்தாய் போற்றி
ஊழி ஏழான ஒருவா போற்றி
அமையா வருநஞ்சம் ஆர்ந்தாய் போற்றி
ஆதி புராணனாய் நின்றாய் போற்றி
கமையாகி நின்ற கனலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி. ..... (08)
13:14 மூவாய் பிறவாய் இறவாய் போற்றி
முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி
தேவாதி தேவர் தொழும் தேவே போற்றி
சென்றேறி எங்கும் பரந்தாய் போற்றி
ஆவா அடியேனுக்கு எல்லாம் போற்றி
அல்லல் நலிய அலந்தேன் போற்றி
காவாய் கனகத் திரளே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி. ..... (09)
14:49 நெடிய விசும்பொடு கண்ணே போற்றி
நீள அகலம் உடையாய் போற்றி
அடியும் முடியும் இகலிப் போற்றி
அங்கு ஒன்று அறியாமை நின்றாய் போற்றி
கொடியவன் கூற்றம் உதைத்தாய் போற்றி
கோயிலா என் சிந்தை கொண்டாய் போற்றி
கடிய உருமொடு மின்னே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி. ..... (10)
16:22 உண்ணாது உறங்காது இருந்தாய் போற்றி
ஓதாதே வேதம் உணர்ந்தாய் போற்றி
எண்ணா இலங்கைக்கோன் தன்னைப் போற்றி
இறை விரலால் வைத்து உகந்த ஈசா போற்றி
பண்ணார் இசையின் சொல் கேட்டாய் போற்றி
பண்டேயென் சிந்தை புகுந்தாய் போற்றி
கண்ணாய் உலகுக்கு நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி. ..... (11)
குறிப்பு : இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.
ஆறாம் திருமுறை | திருநாவுக்கரசர் தேவாரம்
• ஆறாம் திருமுறை | திருநாவுக்கரசர் தேவாரம்
"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: